மேகதாதுவில் புதியஅணை கட்டும் கர்நாடக அரசின் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும்: என்.ஆர்.தனபாலன் கோரிக்கை

சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவு ஒருதலை பட்சமானது. கடந்த 10 ஆண்டுகளாகவே கர்நாடக அரசு இதுபோன்ற அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருவதோடு அதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறது. ஆதலால் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதோடு டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டும். டெல்டா பகுதி விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் தமிழகத்தில் ஆறுகளை இணைத்து, அதன்மூலம் புதிய நீர்நிலைகளை உருவாக்கி, அதிகமான விளை நிலங்களை ஏற்படுத்தி நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: