ஊரடங்கால் சாப்பாட்டுக்கு வழியில்லை: நண்பரின் வீட்டில் திருடிய 2 நடிகைகள் கைது

மும்பை: ஊரடங்கால் சாப்பிட வழியின்றி தவித்த நிலையில், மும்பையில் நண்பரின் வீட்டில் திருடிய 2 நடிகைகளை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகான் கிழக்கு அரே போலீசார், இரண்டு தொலைக்காட்சி நடிகைகளை திருட்டு வழக்கில் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி நூதன் பவார் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட நடிகைகள் சுராபி சுரேந்திர லால் ஸ்ரீவஸ்தவா (25), மொசினா முக்தர் ஷேக் (19) ஆகியோர் தங்களது நண்பரின் வீட்டிற்கு விருந்தினராக சென்றனர். அங்கு சில நாட்கள் தங்கிய இருவரும், கடந்த மே 18ம் தேதியன்று அந்த வீட்டில் இருந்து ரூ. 3 லட்சத்து 28 ஆயிரம் ரொக்கத்தை திருடியுள்ளனர். பின்னர் இருவரும், நண்பரின் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டனர்.

சில நாட்கள் கழித்து வீட்டில் பணம் காணாதது குறித்து, அவர்களது நண்பர் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சொசைட்டி காம்பவுண்டில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில், குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தங்கள் நண்பரின் வீட்டில் இருந்து ஒரு பையில் பணத்தை எடுத்துச் செல்வது தெரிகிறது. அதையடுத்து, இருவரையும் தற்போது கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து 60,000 ரூபாய் பணத்தை மட்டுமே மீட்டுள்ளோம்.

தனியார் டிவி நிகழ்ச்சிகளில் கிரைம் ரோந்து மற்றும் சவ்தான் இந்தியா போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளைத் தவிர, பல வலைத் தொடர்களிலும் நடித்துள்ளனர்.

இருவரையும், நாளை (ஜூன் 23) வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஊரடங்கால் அவர்களின் வேலை போய்விட்டதாகவும், வயிற்றை நிரப்ப நண்பரின் வீட்டில் திருடியதாகவும் தெரிவித்தனர்’ என்றார்.

Related Stories: