5 ஆண்டுகள் சமூகமாக ஆட்சி நடக்க புதுச்சேரி சபாநாயகர் அறையில் திடீர் சிறப்பு பூஜை!: சபாநாயகருக்கு கருங்காலி கோல் கொடுத்த சிவனடியார்கள்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சிக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் 5 ஆண்டுகள் சுமூகமாக நடக்க வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சபாநாயகர் அறையில் பூஜை நடத்தி பேரவை தலைவர் செல்வம் கையில் கருங்காலி கோல் கொடுத்தனர். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் மட்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில் இன்னும் அமைச்சரவை அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 

அதேபோல் இந்த கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே அவ்வபோது மோதல்கள், குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் எந்தவித தடங்களும் இன்றி அடுத்த 5 வருடம் சிறப்பான முறையில்  ஆட்சி நடத்திட வேண்டி பேரவையில் உள்ள சபாநாயகர் செல்வம் அறையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

திருவண்ணாமலை மற்றும் பழனியில் இருந்து வந்திருந்த 20க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், சிறப்பு பூஜை செய்து சபாநாயகர்  செல்வத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அவருக்கு 2 கருங்காலி கோல்களை வழங்கினர். சபாநாயகர் பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பூஜை செய்து கருங்காலி கோல்களை சிவனடியார்கள் வழங்கியதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார். 

சபாநாயகர் அறையில் காவி உடையில்  சிவனடியார்கள் சிறப்பு பூஜை செய்து கருங்காலி கட்டை கொடுக்கப்பட்ட விவகாரம் புதுச்சேரி சட்டமன்றத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை திகைப்படைய செய்தது. 

Related Stories: