திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்திய 14 வயது மகனை தாய் பலாத்காரம் செய்யதாக கூறப்பட்ட வழக்கில் சிறப்பு அதிகாரி விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடைக்காவூரை சேர்ந்த 37 வயது பெண்ணுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதையடுத்து அந்த பெண் வேறு திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அந்த பெண் மீது முதல் கணவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கடைக்காவூர் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது 14 வயது மகனை தன்னுடைய மனைவி பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.
இது ெதாடர்பாக போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து பெண்ணை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் தவறு செய்யவில்லை என்றும், தன்மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த பெண் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் புகாரில் சந்தேகம் இருக்கிறது என்றும், ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தது. இது தவிர அந்த பெண்ணுக்கு ஜாமீன் வழங்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து ஒரு மாதத்துக்கு பிறகு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரியான திவ்யா கோபிநாத் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. சிறுவனுக்கு கவுன்சிலிங் அளித்து, மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதுதொடர்பான விசாரணை அறிக்கையை திவ்யா கோபிநாத் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது: 14 வயது சிறுவனை தாய் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் உண்மையில்லை. சிறுவன் அடிக்கடி தாயின் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார். இதை அறிந்த தாய் அவனை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கோபத்தால் தான் தன்னுடைய தாய் மீது பொய்யான புகார் கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பரிசீலித்த நீதிமன்றம் கடைக்காவூர் போலீசுக்கு கண்டனம் ெதரிவித்தது. புகார் குறித்து முறையாக விசாரிக்காமல் வழக்கு பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்து சிறையில் அடைத்தது தவறு என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.