சாயர்புரம் அருகே மான் கொம்புகள், பயங்கர ஆயுதங்களுடன் வாலிபர் கைது

*எஸ்பி நேரில் விசாரணை

ஏரல் :  சாயர்புரம் அருகே மான் கொம்புகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபர் கைது செய்து செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் எஸ்.ஐ ராஜேந்திரன், ஏட்டுக்கள் சங்கர், இன்பராஜ், இளையராஜ் மற்றும் போலீசார், போப் கல்லூரி அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை மறித்து சோதனை நடத்தினர்.

பைக்கில் மான் கொம்புகள், கத்தி,  வீச்சு அரிவாள் உள்ளிட்டவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மான் கொம்பு மற்றும் ஆயுதங்கள் மற்றும் அவரது பைக்கை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் சிவத்தையாபுரம் சாமி கோயில் தெரு காளிமுத்து மகன் ஆனந்த சேகர் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார், ஆனந்தசேகர் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனையிட உத்தரவிட்டார்.

இதையடுத்து வைகுண்டம் டி.எஸ்.பி. வெங்கடேசன் மேற்பார்வையில் ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா தலைமையில் போலீசார் ஆனந்தசேகர் வீட்டில் சோதனை  நடத்தினர். இதில் மேலும் 3 பெரிய வீச்சு அரிவாள், 1 அரிவாள், 3 பெரிய கத்தி, 3 மான் கொம்புகள் மற்றும் ஷரங்கு எனப்படும் கைப்பிடியுடன் கூடிய பெரிய குத்துகம்பி ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்து அவற்றையும் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து ஆனந்தசேகரை கைது செய்தனர்.

 இதையடுத்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சாயர்புரம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து ஆனந்தசேகரின் பைக் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 4 மான் கொம்புகள், 3 பெரிய வீச்சு அரிவாள்கள், 2 அரிவாள்கள், 4 பெரிய கத்திகள், பெரிய குத்துகம்பி ஆகியவற்றை பார்வையிட்டு விவசாரணை நடத்தினார். மேலும் எதற்காக அவர், சட்டவிரோதமாக பயங்கர ஆயுதங்களை வீட்டில் வைத்திருந்தார், மான் கொம்புகள் அவரிடம் எப்படி வந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: