×

சஹானா சாரல் தூவுதோ...இளையராஜா சார் மாதிரி இசையமைப்பாளரா வரணும்!

நன்றி குங்குமம் டாக்டர்

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மைஉண்டு ஓடு ராஜா’ படத்தில் ‘அன்பின் வழியது உயிர்நிலைதானே’ என்ற பாடலைப் பாடிய குட்டி தேவதை சஹானாவை பாடச் சொல்லிக் கேட்டவுடன், உருகி உருகி அந்தப் பாடலைப் பாடத் தொடங்கினார். கூடவே அவரின் விரல்கள் கீ போர்டில் வித்தை காட்டின. இசைத்தபடி பாடிய அந்த சிண்ட்ரெல்லாவைப் பார்க்கும் நமக்குத்தான் மனசு கனத்துப் போனது. காரணம், பிறவியிலேயே பார்வை இன்றி பிறந்திருக்கிறார், சஹானா.

சஹானாவிடம் பேசினோம், ‘‘நான் குட்டி பாப்பாவா இருக்கும்போதே பாட்டுக்களை கேட்டுக் கொண்டே இருப்பேன். அப்படியே இசையில் எனக்கு ஆர்வம் வந்துருச்சு. என்னோட ஆறு வயதில் கர்நாட்டிக் இசை கற்க ஆரம்பித்தேன். இளையராஜா சார் மாதிரி பெரிய இசை அமைப்பாளராக வரணும்... நிறைய பாடல்களை கம்போஸ் பண்ணணும்’’ என்றார்.

பிஞ்சு விரல்களால் கீபோர்டை இசைத்தபடி, ‘‘எனக்கு கீபோர்டு நல்லா இசைக்க வரும். ஒரு நிகழ்ச்சியில் ‘காதலே  என் காதலே...’  என்ற பாட்டை நான் கீ போர்டில் வாசிக்க, எஸ்.பி.பி. அங்கிள் அந்தப் பாட்டை பாடினார். பிறகு என்னை பாராட்டி கீபோர்டு ஒன்றை  அன்பளிப்பாகத் தந்தார்’’ என்றார்.

‘‘ஏ.ஆர்.ரகுமான் சாரோட கே.எம். மியூசிக் கல்லூரியில் ரஷ்யன் ஸ்டைல் பியானோ கத்துக்குறேன். பியானோவில் 4வது கிரேடுவரை முடிச்சுட்டேன். 8வது கிரேடுவரை இருக்கு. சமீபத்தில் சாதனை புரிந்த லிடியன் அண்ணா மாதிரி ஸ்பீடா வாசிக்கனும் என்பதே என் ஆசை. ரைஹான மேடத்திடம் மியூசிக் டெக்னிக்ஸ் கத்துக்குறேன்.

‘நீ அழகா பாடுற. வேகமாக ரொம்ப நல்லா கீ போர்டு வாசிக்கிற’ன்னு சொன்னாங்க. சிவானந்த பாலேஷ் அவர்களிடம் ஹிந்துஸ் தானி வோக்கல் கற்றுக்கொள்கிறேன். வீணையும் கற்கிறேன். வயலின், கிட்டார் எல்லாம் கற்கும் ஆசையும் இருக்கு. ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்திற்காக சபீர் சார் என்னிடம் பாடல் வரிகளை படிச்சுக் காட்டி எப்படி பாடணும்னு சொல்லித் தந்தார்’’ என முடித்தார்.

சஹானாவைத் தொடர்ந்த அவரின் அம்மா லோகினி, ‘‘பார்வையின்றி அவள் பிறந்ததை உணர்ந்த அந்த நொடி ரொம்பவே வலியாக இருந்தது. எப்படியாவது இந்த உலகத்தை அவளைப் பார்க்க வைக்க அவளது மூன்று வயது வரை முயற்சித்தோம். அதற்கான சாத்தியம் இல்லை என்றானதும், எங்கள் ஓட்டத்தை மாற்றிக்கொண்டோம்.

அவளின் இசை ஆர்வத்தை வளர்ப்பதில் இறங்கினோம். பார்வை மட்டும்தான் இல்லையே தவிர, அவளது துறுதுறுப்பும், வளர்ச்சியும் ரொம்பவே வேகமாக இருந்தது. ஏமாற்றவோ, மறைத்து எதையும் சொல்லவோ அவளிடம் எங்களால் முடியாது. சட்டென அனைத்தையும் உள்வாங்குவாள்.

பார்க்காமலே எல்லாவற்றையும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவள் செயல்படும் விதத்தைப் பார்த்த எங்களுக்கு, அவளுக்கு பார்வை இல்லை என்கிற குறையே தெரியவில்லை. கீபோர்டு இருந்தால் போதும், சஹானா எல்லாவற்றையும் சாதித்துக் காட்டுவாள்’’ என முடித்தார்.

சஹானாவின் அப்பா நிரேன்குமாரிடம் பேசியபோது, ‘‘அவள் 6 மாதக் குழந்தையாக இருந்தபோது விளையாட்டு கீபோர்டு ஒன்றை வாங்கிக் கொடுத்தோம். அதையே இசைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். இசையில் அவளுக்கு இருக்கும் ஆர்வத்தை உணர்ந்து 4 வயதில் தினேஷ் மாஸ்டரிடம் மியூசிக் கற்றுக்கொள்ள சேர்த்தோம்.

2 மாதத்திலேயே கீ போர்டை அசால்டாக பிளே பண்ணத் தொடங்கினாள். எந்த பாட்டைக் கேட்டாலும் சட்டுன்னு பிளே பண்ணி காட்டுவாள். சத்தத்தை வைத்தே இசைக் கருவி, சுருதி, டெம்போ எல்லாத்தையும் சரியாகச் சொல்லுவாள். தொடர்ந்து ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுகளில் இடம் பிடித்தாள்.

 அடுத்து கின்னஸ் ரெக்கார்டுக்கான முயற்சியிலும் இருக்கிறாள். அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், பிரெய்லி முறையில் நான்காம் வகுப்பு படிக்கிறாள். படிப்பிலும் படு சுட்டி’’ என முடித்தார். ‘‘வாங்க உங்களுக்காக ஒரு பாட்டை பிளே செய்து காட்டுகிறேன்...’’ என்று நம் கரம் பிடித்து அழைத்துச் சென்ற சஹானா விரல்களுக்குள் ‘கண்ணான கண்ணே... கண்ணான கண்ணே... என் மீது சாய வா’ - என இசைத்தவாறே பாடிய பாடல் நம்மை உருக
வைத்தது. கீ போர்டை இசைத்துக்கொண்டே  பாடுவதுதான் இந்த குட்டி தேவதையின் ஸ்பெஷல்.நீ சாதிப்படா செல்லம்!

மகேஸ்வரி நாகராஜன்    

ஆ.வின்சென்ட்பால்

Tags :
× RELATED தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!