சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் மதிப்பீடு முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் நாளை விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மதிப்பெண் மதிப்பீடு முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் நாளை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 10, 11, 12 என மூன்று வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் விகிதாச்சார அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ அமைத்த குழு பரிந்துரைத்துள்ளது.

அந்த முறையை எதிர்த்து மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி கந்தல்கர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டன. 10, 11, 12ஆம் வகுப்பின் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண்ணை அறிவிப்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என அப்போது வாதிடப்பட்டது. கொரோனா தொற்று குறைந்து வருவதால் கூடுதல் மையங்களில் தனிமனித இடைவெளியுடன் பிளஸ் 2 தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் உடனடியாக இறுதிமுடிவு எடுக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள் மத்திய அரசின் கருத்துக்களையும் கேட்க வேண்டி இருப்பதால் நாளை மதியம் 2 மணிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Related Stories: