வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடியில் இருந்து மீன்கள் சப்ளை-விரைவில் இயல்பு நிலை; வியாபாரிகள் நம்பிக்கை

வேலூர் : வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி உட்பட உள்ளூரில் இருந்து மட்டும் மீன்கள் சப்ளையாவதால் அவற்றின் விலையும் உயர்ந்தே காணப்பட்டது.

வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி, நாகை, கேரள மாநிலம் கொச்சி, கர்நாடக மாநிலம் மங்களூரு ஆகிய இடங்களில் இருந்து மீன்கள், நண்டுகள், கிளிஞ்சல்கள் வரத்து உள்ளது. வார நாட்களில் மட்டும் 150 லாரிகளுக்கு மேல் மீன் வரத்து இருக்கும்.

பிற நாட்களில் 70 முதல் 80 லாரிகள் மூலம் சரக்கு வரத்து இருக்கும். இங்கிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு மீன்கள் அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு, அதனால் போக்குவரத்து நிறுத்தம் உட்பட பல காரணங்களால் வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு வார நாட்களில் வெறும் 40 முதல் 50 லாரிகள் மட்டுமே மீன்கள் வரத்து உள்ளது. இதனால் தேவையை விட வரத்து குறைவாக உள்ளதால் விலையும் நேற்று அதிகரித்து காணப்பட்டது.

அதன்படி, வேலூர் மீன் மார்க்கெட்டில் வஞ்சிரம் கிலோ ₹600 ஆகவும், சங்கரா கிலோ ₹200 முதல் ₹250 வரையும், மத்தி கிலோ ₹120, அயிலா கிலோ ₹150 ஆகவும், நண்டு கிலோ ₹200 ஆகவும் விற்பனையானது.இதுதொடர்பாக மீன் வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘அடுத்த வாரம் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது வேலூர் மார்க்கெட்டுக்கு மீன் சப்ளை என்பது தூத்துக்குடியில் இருந்து மட்டுமே வருகிறது. நமக்கு கேரளாவின் கொச்சி, மங்களூரு, கார்வார் ஆகிய இடங்களில் இருந்து அதிக வரத்து இருக்கும். இப்போதைய நிலையில் வார நாட்களில் நமக்கு வழக்கமாக வரும் 150 லாரிகளில் பாதி கூட வருவதில்லை. அதனால் விலை சற்று உயர்ந்துதான் உள்ளது’ என்றனர்.

Related Stories: