பொன்னை : பொன்னை அடுத்த வள்ளிமலையில் கடந்த 3 மாதமாக குடிநீர் முறையாக வினியோகிக்காததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த வள்ளிமலை திருவலம் மெயின் ரோடு பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் முறையாக வினியோகம் செய்வதில்லையாம்.
மேலும், இப்பகுதியில் இருந்த சின்டெக்ஸ்சில் குடிநீரின்றியும், பழுதடைந்தும் கடந்த 6 மாதங்களாக காணப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் குடிநீரின்றி கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதிமக்கள் தெரிவித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும், காணமல் உள்ளனராம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், பழுதடைந்த நிலையில் உள்ள சின்டெக்ஸ் டேங்கை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.