செய்யாறு தேரடி பகுதியில் சிதிலமடைந்து குப்பை மேடாக காட்சியளிக்கும் விஏஓ அலுவலகம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செய்யாறு : செய்யாறு பங்களா தெரு தேரடி பகுதியில் விஏஓ அலுவலகம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தில் பரிதிபுரம், திருவத்தூர் பகுதி மக்கள் பல்வேறு சான்றுகளை பெற உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில், விஏஓ அலுவலகம் ஓட்டு கட்டிடம் என்பதால் காலப்போக்கில் சிதிலமடைந்தது. அடிக்கடி பழுதுபார்த்து வந்த நிலையிலும் புயல் மற்றும் பெரு மழையால் ஓட்டு கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் விஏஓவை சந்திப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக கட்டிடம் பயன்பாட்டில் இல்லாததால் அந்த இடம் சீட்டு ஆடுவதற்கும், சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறியுள்ளது.

எனவே, அந்த இடத்தில் மீண்டும் விஏஓ அலுவலகம் செயல்பட அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். முறையான விஏஓ அலுவலகம் இல்லாததால் விஏஓவை உடனடியாக சந்திப்பதில் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தாலுகா அலுவலகத்தில் விஏஓவை தேடி சென்று பார்க்கும் நிலை உள்ளது. எனவே, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து குப்பை மேடாக காட்சி அளிக்கும் விஏஓ அலுவலக கட்டிடத்தை உடனடியாக அப்புறப்படுத்தி புதிய அலுவலக கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், செய்யாறு எம்எல்ஏவிற்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: