கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் முக்கிய திட்டம் உருவாக்கப்பட உள்ளது : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

புதுடெல்லி:கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பங்களுக்கும் உதவிடும் வகையில் ஒருசில முக்கிய திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது என மத்திய அரசு உறுதியளித்ததை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை என்பது மிகப்பேரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிந்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் இறந்த ஒவ்வொருவருக்கும் இழப்பீட்டு தொகையாக ரூ.4லட்சத்தை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 12வது பிரிவின்படி வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரின் கோரிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என கடந்த 11ம் தேதி மத்திட அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது அதில்,மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க ஏராளமான நிதியை செலவு செய்து வருவதால் கொரோனாவால் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் இழப்பீட்டு தொகையாக தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் என்பதை வழங்க முடியாது,என குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா,கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் உதவி செய்யும் விதமாக ஒருசில முக்கிய திட்டங்கள் உருவாக்கப்பட்ட உள்ளது. அதுகுறித்த பரிசீலனை முடிந்தவுடன் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரத்தில் முக்கிய திட்டங்கள் உருவாக்கப்பட இருக்கிறது என்ற மத்திய அரசின் உறுதியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories: