புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று பிற்பகல் 12.02 மணியளவில் பஞ்சாபி பாக் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 2.1 புள்ளிகளாக பதிவானது. இதனால், சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. சமீப காலமாக, டெல்லியில் தொடர்ச்சியாக லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் பல்வேறு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் டெல்லியின் வடகிழக்குப் பகுதி, ரோடாக், சோனிபட், பாக்பட், பரிதாபாத் மற்றும் அல்வார் போன்ற இடங்களில் அதிக நில நடுக்கம் உண்டானது. இதற்கான காரணத்தை அறிய, ஆய்்வு செய்ய, தேசிய நில நடுக்க ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்ப கருவிகளை டெல்லிக்கு வரவழைத்து ஆய்வுகள் செய்யப்பட இருப்பதாக இதன் அதிகாரிகள் கூறியுள்ளனர். செயற்கைக்கோள் புகைப்படங்கள், நில நடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியமான இடங்களின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடைபெற உள்ளது.