ஒரு மாதத்துக்கு மேலாக வேலையின்றி இருப்பவர்களும் பிஎப்.பில் பணம் எடுக்கலாம்: மத்திய அரசு சலுகை

புதுடெல்லி: ஒரு மாதத்திற்கு மேல் வேலையின்றி இருக்கும் ஊழியர்கள், பிஎப் கணக்கின் மொத்த தொகையில் இருந்து 75 சதவீதம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2வது ்அலை தாக்குதல் காரணமாக, தற்போது பணியில் இருக்கும் ஊழியர்கள் பிஎப்.பில் இருந்து 75 சதவீத பணத்தை எடுக்கும் சிறப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா சூழ்நிலையால் பல லட்சம் ஊழியர்கள் வேலைஇழந்து தவித்து வருகின்றனர். இதன் காரணமாக வருமானம் இன்றி, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இவர்களை கருத்தில் கொண்டு, வேலை இழந்து தவிக்கும் ஊழியர்களும் தங்களின் பிஎப் தொகையில் இருந்து 75 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு மாதத்திற்கு அல்லது அதற்கு மேல் வேலையின்றி இருப்பவர்கள், தங்களின் பிஎப் கணக்கில் உள்ள மொத்த தொகையில்  இருந்து 75 சதவீதத்தை எடுக்கலாம். இந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பணத்தை எடுப்பதால் இந்த கணக்குகள் முடக்கப்படாது. அந்த ஊழியர்கள் ஓய்வூதிய உறுப்பினர்களாக தொடர்ந்து நீடிக்க முடியும் என்றும் அது கூறியுள்ளது.

Related Stories: