மரணம் அடைந்த 203 பேருக்கு 10 லட்சம் நிவாரணம் தமிழகத்தில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் 359 பேர்: அதிமுக ஆட்சியில் சமர்ப்பித்த அறிக்கையில் தகவல்

திருச்சி: தமிழகத்தில் 359 பேர் மனித கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்கின்றனர் என்று கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 189 பேர் மனித கழிவுகளை அகற்றுவதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கால்வாய்களை சுத்தம் செய்ய நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. ஆனாலும் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தொடர்ந்து கொண்டே வருகிறது. மனித கழிவை மனிதனே அகற்றுவது மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய தூய்மைப்பணி தொழிலாளர்கள் ஆணையம் பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிகளை மாநில அரசுகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து 2020 - 21ம் ஆண்டு அறிக்கைக்காக, தமிழகத்தில் மனித கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்பவர்கள் தொடர்பான தகவலை  தேசிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆணையம் கேட்டு இருந்தது. இதன்படி, கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக இயக்குனராக இருந்த பாஸ்கரன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருக்கு இது தொடர்பான அறிக்கையை 2021 ஏப்ரல் மாதம் சமர்ப்பித்துள்ளார்.

அதில், தமிழகத்தில் 359 பேர் மனித கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்கின்றனர்  என்றும், அவர்களில், டெல்டா மாவட்டங்களில் மட்டும் 189பேர் மனித கழிவுகளை  அகற்றுவதாகவும் உள்ளாட்சி அமைப்பு வாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மனித கழிவுகளை அகற்றும் போது மரணம் அடைந்த 203 பேர்களின் பட்டியலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இதில் 1998 முதல் 2021 பிப்ரவரி வரை மரணம் அடைந்த 203 பேருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளதாக உள்ளாட்சி அமைப்பு வாரியாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 37 வழக்கு

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றியது தொடர்பாக இந்தியாவில் மொத்தம் 266 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 37 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிக வழக்கு பதிவான மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.

உள்ளாட்சி

அமைப்பு

வாரியாக    மனித கழிவுகள் அகற்றுபவர்கள்

எண்ணிக்கை

சென்னை மாநகராட்சி    170

திருச்சி மாநகராட்சி    84

தஞ்சாவூர் மாநகராட்சி    27

தூவாக்குடி நகராட்சி    3

மணப்பாறை நகராட்சி    9

திருவையாறு நகராட்சி    6

நாகை நகராட்சி     6

புதுக்கோட்டை நகராட்சி    7

அறந்தாங்கி நகராட்சி    7

அரியலூர் நகராட்சி    5

ஜெயங்கொண்டாம் நகராட்சி    35

மொத்தம்    359

உள்ளாட்சி

அமைப்பு

வாரியாக    மரணம்

அடைந்தவர்கள்

எண்ணிக்கை   

ஊரக வளர்ச்சி துறை    48

சென்னை குடிநீர் வாரியம்    41

சென்னை மாநகராட்சி    35

மற்ற மாநகராட்சிகள்    27

நகராட்சிகள்    26

குடிநீர் வாரியம்    14

பேரூராட்சிகள்    9

குடிசை மாற்று வாரியம்    3

மொத்தம்    203

Related Stories: