சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பு ஊசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 11,490 பேர் பயன்பெறும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு உள்ளது. தமிழக அரசு சார்பில் சட்டப் போராட்டம் என்பது தொடரும். திமுக அரசு என்றும் நீட் தேர்வுக்கு எதிரானது. நீட் தேர்வினை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.