சென்னை: வரலாறு காணாத அளவுக்கு டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 28ம் தேதி கருப்பு தினமாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸின் தமிழக தலைவர் முருகன் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தமிழ்நாடு நேற்று இணையதளம் வாயிலாக தமிழகத்திலுள்ள 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், உச்சபட்ச டீசல் விலை உயர்வு, நிதி நிறுவனங்களின் அடாவடி வசூல் அச்சுறுத்தல், இன்சூரன்ஸ், சுங்கசாவடி முறைகேடுகள், மோட்டார் நலவாரியம் மற்றும் இதர நிலுவையிலுள்ள கோரிக்கைகள் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.