அதிமுக அரசின் தவறான நடவடிக்கையால் சென்னையின் நிலத்தடி நீர் தன்மை பாதுகாப்பற்றதாக மாறிய அவலம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை: கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் தவறான நடவடிக்கையால் சென்னையின் பல இடங்களில் நிலத்தடி நீர் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது.  சென்னை மாநகரில் நிலத்தடி நீரின் பயன்பாடு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் முறையாக இல்லாததால் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் 200 முதல் 400 அடிக்கு கீழ் சென்று விட்டது. இதனால், கடல் நீர் உட்புகுந்து சென்னையில் பல இடங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியுள்ளது. ஆனால், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும், நீரின் தரத்தை உயர்த்தவும் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக, சென்னையின் பல இடங்களில் நிலத்தடி நீரின் தன்மை பாதுகாப்பானதாக மாறியுள்ளது. இது தொடர்பாக மாநில நிலத்தடி நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை, அடையாறு, தி.நகர், சேப்பாக்கம், ராயபுரம், பள்ளிக்கரணை, உத்தண்டி, முட்டுக்காடு, ஈஞ்சம்பாக்கம், அக்கரை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தடி நீர் பாதுகாப்பானதாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.  இதற்கு நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்க நடவடிக்கை எடுக்காததும், வணிக ரீதியாக நிலத்தடி நீர் திருட்டை தடுக்க முடியாமல் போனதே காரணம் என்று நீரியல் வல்லுனர் ஒரவர் தெரிவித்தார். அதே நேரத்தில் கோட்டூர்புரம்,  சைதாப்பேட்டை, பாரிமுனை, நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி,  வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பாதுகாப்பாக இருப்பதும்  ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து நீரியல் வல்லுனர் கூறுகையில், ‘நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்க வீடு, வீடாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், மாநகரின் நிலத்தடி நீர் தேவையை கணக்கில் கொண்டு கடந்த ஆட்சியில் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைத்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்யும் பட்சத்தில் கடல் நீர் உட்புகுவதை தடுத்து இருக்க முடியும். ஆனால், இதை செய்ய தவறியதால் தான் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாப்பனதாக இல்லாமல் போய் விட்டது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: