குடியாத்தம் அருகே வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் நேற்று சாலையோரம் மூதாட்டி ஒருவர் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக மொபட்டில் குடிபோதையில் வந்த வாலிபர் மூதாட்டி மீது மோதுவது போல் சென்றுள்ளார். மேலும் அவர் ஓட்டி வந்த மொபட் சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மொபட்டில் வந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் தப்பி தனது வீட்டிற்குள் சென்றுவிட்டார். இதுகுறித்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போதையில் ஆட்டம் போட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவரது பெயர் அரவிந்த்(33), அவர் ஓட்டி வந்த மொபட் திருடப்பட்டது என்பதும் தெரிந்தது. தொடர்ந்து, அவரது வீட்டில் நடந்த சோதனையில், வீட்டின் தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனையில் ஈடுபட்டு வருவதும், கைத்துப்பாக்கி வைத்திருப்பதும் தெரிந்தது. மேலும், அதே பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் 3 விலை உயர்ந்த வெளிநாட்டு நாய்க்குட்டிகளை திருடிக் கொண்டு வந்து வீட்டில் பராமரித்து வருவதும் தெரிந்தது. தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிந்து அரவிந்தை கைது செய்தனர். மேலும் மொபட், கைத்துப்பாக்கி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: