தேன்கனிக்கோட்டை: கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொலை செய்ய கூலிப்படை ஏவிய மனைவி மற்றும் 4பேரை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த உள்ள மஞ்சுகொண்டப்பள்ளி பேல்ப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (44). விவசாயி. இவரது மனைவி கங்கா (32). கருத்து வேறுபாடு காரணமாக 8 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கங்கா பெங்களூரில் தனியாக வசித்து வந்தார். இதனிடையே கங்காவிற்கு பெங்களூரில் மற்றொரு நபருடன் கள்ளத் தொடர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சிவக்குமார் அங்கு சென்று அடிக்கடி கங்காவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் கணவர் மீது கங்கா ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பேல்ப்பட்டிக்கு 2 டூவீலரில் வந்த மர்மநபர்கள் 4 பேர் சிவக்குமாரை கத்தியால் சரமாரியாக கை, கால்களில் வெட்டினர். இதில், சிவக்குமாருக்கு வலது கை மற்றும் வலது காலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வந்த நிலையில்,ஆசாமிகள் தப்பியோடிவிட்டனர். படுகாயம் அடைந்த சிவக்குமாரை மீட்ட உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அஞ்செட்டி போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கள்ளத்தொடர்பு குறித்து கண்டித்ததால், கங்கா கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கங்கா மற்றும் கூலிப்படையைச்சேர்ந்த 4 பேரை தேடி வருகின்றனர்.