லக்னோ: டிவிட்டர் வெளியாகும் சர்ச்சை பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தரபிரதேச போலீசார் சார்பில் அனுப்பப்படும் இ-மெயில்களுக்கு, இதுவரை எவ்வித பதிலும் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லோனி பகுதியை சேர்ந்த முதியவர் மீதான தாக்குதல் தொடர்பான விவகாரத்தில், டுவிட்டர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாாரி உள்ளிட்டோர் மீது காஜியாபாத் போலீசார் வழக்குபதிந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், டுவிட்டர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மணீஷ் மகேஸ்வரி, ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க போலீசார் அவகாசம் அளித்துள்ளனர்.
இருப்பினும், டுவிட்டர் இந்தியா உத்தரபிரதேச போலீசாருக்கு ஒத்துழைக்குமா? என்பது கேள்வியாக உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஓராண்டில் காஜியாபாத் போலீசார் சார்பில், சமூக மோதல்கள், வன்முறைகள் தொடர்பான சர்ச்சைக்குரிய போலி பதிவுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சுமார் 26 மின்னஞ்சல்களை (போலீஸ் மெயில் - டுவிட்டர்) டுவிட்டருக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், டுவிட்டரில் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. அதேபோல், மேற்கண்ட புகாரை போன்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கும் சுமார் 401 மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அதில், 246 இ-மெயில்களுக்கு மட்டுமே பதில் அளிக்கப்பட்டுள்ளன. புகார் அளித்து 90 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று விதிமுறை இருந்தும், கிட்டதிட்ட 155 இ-மெயில்களுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. டுவிட்டரின் இத்தகைய அலட்சிய மனப்பான்மையைக் கருத்தில் கொண்டு, தற்போது புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.