தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, சென்னை, புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகக்கூடும்.

அதேபோல் நாளை முதல் வருகிற 23ம் தேதி (புதன்கிழமை) வரை மேற்கு தொடர்ச்சி ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை இன்று வீசக்கூடும். அதேபோல் இன்று முதல் வருகிற 23ம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 அவ்வப்போது 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: