சென்னையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்; அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு

சென்னை: சென்னையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற நுகர்வோர் சேவை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின் நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர். மின் நுகர்வோர் மையம் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும். 

நுகர்வோரின் குறைகளைப் பெறுவதற்காக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அளிக்கும் புகார்களை பெற்று, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மின்விநியோக அலுவலகங்களுக்கு தெரிவித்து, குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் ஒருங்கிணைந்த முறையில் புகார்களுக்குத் தீர்வு காணப்படும். மின் நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். 1912 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதில் குறைபாடுகள் இருப்பதால் இந்த புதியஎண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நுகர்வோர் 1912 எண்ணை தொடர்பு கொண்டால், அந்த அழைப்பு புதிய எண்ணுக்கு மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: