சிவசங்கர் பாபாவுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியைகளுக்கு போலீஸ் வலை: ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

சென்னை: சிவசங்கர் பாபாவுக்கு மாணவிகளை அனுப்ப உறுதுணையாக இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள இரு ஆசிரியைகளைம் சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். இதில் முக்கிய உதவியாளரான ஒருவர் வெளிநாடு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்தப் பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று  முன்தினம் அவருக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் முன்னாள் மாணவியும், பள்ளி அருகில் வசிப்பவருமான சுஷ்மிதா (30) என்பவரை சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இவர்தான் மாணவிகள் பலரையும் சிவசங்கர் பாபாவின் சொகுசு அறைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். மாணவிகள் வெளியில் வரும்வரை காத்திருந்து, பின்னர் அவர்களை மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். அதோடு மாணவிகளின் பிறந்த நாளையும் குறித்துக் கொண்டு அவர்களில் சிலரை, ஒவ்வொரு ஆண்டும் அழைத்து ஆசீர்வாதம் வாங்க வரும்படி அவரது அறைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகளும் சிபிசிஐடி போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால், இந்தப் புகாரை சுஷ்மிதா சிபிசிஐடி போலீசில் மறுத்துள்ளார். மாணவிகளை சிவசங்கர் பாபாவை சந்திக்கும்படி கூறியது உண்மைதான்.

ஆனால் விருப்பம் இருந்தால் பாருங்கள் என்றுதான் சொன்னேன். வற்புறுத்தி அழைத்துச் செல்லவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு முன்னதாக, சிவசங்கர் பாபாவின் அறைக்கு மாணவிகளை அனுப்ப உடந்தையாக இருந்ததாக கூறி பள்ளி ஆசிரியைகள் தீபா மற்றும் பாரதி ஆகியோர் மீது மாமல்லபுரம் மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஆசிரியை பாரதி தற்போது அமெரிக்காவில் உள்ளார். மற்றொரு ஆசிரியர் தீபா பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அவரை கைது செய்வதற்காக சிபிசிஐடி போலீசார் நேற்று இரவு ஆசிரம வளாகத்தில் உள்ள மகாஜோதி காலனி, கல்கி காலனி ஆகியவற்றிலும், ஆசிரமத்துக்கு வெளியே உள்ள பழனிகார்டன் குடியிருப்பிலும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

தீபாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திரும்பினர். சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டபோதே தீபா தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

மேலும் சிவசங்கர் பாபாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார், தீபா தற்போது எங்கு இருகிறார் என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சுசில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் கருணா, நீரஜ் ஆகியோரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், சிவசங்கர்பாபா, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தற்போது குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் முழுமையாக குணமடைந்தால், புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

* பிரிந்து சென்ற குடும்பம்

சிவசங்கர் பாபா, சாமியாராக மாறியது அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இவர் பெண்கள் விஷயத்தில் தவறாக நடப்பதாக முன்கூட்டியே தகவல் வந்ததால், மனைவி தனது 2 (ஒரு ஆண், ஒரு பெண்) குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். தற்போது இரு பிள்ளைகளும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அவர்களுடன் சிவசங்கர் பாபாவின் மனைவியும் வசித்து வருகிறார். தற்போது ஆசிரமத்தில் சிவசங்கர் பாபாவின் தங்கை மட்டுமே உள்ளார்.

* ஆங்கில ஆசிரியை முன்ஜாமீன் கோரி மனு

சுசில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘எனக்கு எதிராக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சிபிசிஐடியினர் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: