சாலையில் மனுவுடன் நின்ற ஆசிரியர்கள் காரை உடனே நிறுத்தி கோரிக்கையை கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். கொரோனா அதிகரித்து இருந்தபோது நேரடியாக கோவிட் வார்டுக்குள் சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினார். மு.க.ஸ்டாலினின் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பை பெற்றுள்ளது. இதேபோல், தான் எங்கு சென்றாலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனு வாங்கி அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்தவகையில், முதல்வர் சேலம் சென்றபோது பட்டதாரி மாணவி சவுமியா அளித்த கடிதத்தினால் நெஞ்சம் நெகிழ்ந்து அவருக்கு உடனடியாக வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தார். இதுபோன்று, சாலை ஓரம் கோரிக்கை மனுவை கையில் வைத்து நின்றுகொண்டிருந்த  பெண்ணிடம் கான்வாயை நிறுத்தி கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்நிலையில், நேற்று கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த கல்வி தொலைக்காட்சி மற்றும் பாடநூல் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு தனது கான்வாயில் சென்னை தலைமை செயலகம் நோக்கி புறப்பட்டார். அப்போது ஆசிரியர்கள் சிலர் கோரிக்கை மனுவுடன் நூற்றாண்டு நூலகத்திற்கு வெளியே காந்தி மண்டபம் அருகே சாலையில் காத்திருந்தனர். ஆசிரியர்கள் காத்திருப்பதை பார்த்ததும், தனது காரை உடனடியாக நிறுத்த சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர், ‘நீங்கள் யார் எதற்காக இங்கே காத்திருக்கீற்கள்?’ எனக்கேட்டார். அதற்கு அவர்கள், தாங்கள் ஆசிரியர்கள் எனக்கூறி கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதை வாங்கி படித்துப்பார்த்த முதல்வர், ‘ஏன் சாலையில் காத்திருக்கிறீர்கள், தலைமை செயலகத்திற்கு வந்து பாருங்கள்’ எனக் கூறினார். முதலமைச்சரின் மிக எளிமையான அணுகுமுறை தங்களை மகிழ்ச்சியடைய செய்ததாக ஆசிரியர்கள் கூறினர்.

இதுகுறித்து கோரிக்கை மனு அளித்த ஆசிரியர்கள் கூறுகையில், ‘2018-19ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நாங்கள். 2019ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து ஒரு பிரிவினர் வேலையில் அமர்த்தப்பட்டனர். இரண்டாம் பட்டியலில் இருந்த 1,500 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறோம். கொரோனா, தேர்தல் காரணமாக எங்களுக்கு பணி வழங்கப்படாமல் இருந்தது. எனவே, எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க கோரிக்கை மனு அளித்துள்ளோம். முதல்வர் எங்களை பார்த்ததும் காரை நிறுத்தி கோரிக்கை மனுவை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றனர்.

Related Stories: