டிரோன் கேமரா மூலம் புவி சார்ந்த தகவல் அடிப்படையில் கோயில் சொத்துகள் கண்டறியப்படுகின்றன: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்

சென்னை:  தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தையும், பிரசித்திபெற்ற கோயில்களின் தனிப்பட்ட இணையதளங்களையும் முறையாக பராமரிக்கக்கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராதா ராஜன் 2012ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில், தமிழ்நாடு முழுவதும் கோயில்களின் மற்றும் அவற்றின் சொத்துக்களின் விவரங்கள், அந்த சொத்துகள் குத்தகையில் உள்ளதா, வாடகையில் உள்ளதா என்பன உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி  உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், கோயில் சொத்துகளை கண்டறிவதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், கொரோனா பரவால் ஆய்விற்கு அனுப்ப முடியவில்லை.

அதற்கு மாற்றாக டிரோன் கேமரா மூலம் முப்பரிமாண அடிப்படையில் படமெடுக்கப்பட்டு, கோயிலுக்கு சொந்தமான நிலம் அல்லது கட்டிடத்தின் தற்போதைய நிலை குறித்து நீள, அகல, உயர அடிப்படையில் அறிந்துகொள்ளும் ஜி.ஐ.எஸ். எனப்படும் புவி சார்ந்த தகவல் முறையில் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவை ஆவணமாக மாற்றப்பட்டு அந்த சொத்தின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. கோயில் சொத்துக்களின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய வாடகை அல்லது குத்தகையின் நிலை உள்ளிட்ட விவரங்களும், ஜி.ஐ.எஸ். விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த பணிகள் துல்லியமான விவரங்களுடன் விரைவில் முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் இந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Related Stories: