தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா 3ம் அலை கட்டுப்படுத்த உள்கட்டமைப்பு வசதிகள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளது  என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறினார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அவருடன்  இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்றனர். தனியார் நிறுவனங்களால் பெறப்பட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.  

ஆய்வுக்குப் பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: சென்னை அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 50 படுக்கைகள் மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக குறைந்து வருவதை இது காட்டுகிறது. மேலும் ஆக்சிஜன் படுக்கைகள் போதுமான அளவில் தயார் நிலையில் உள்ளது. கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மையங்கள் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளது.   

தமிழ்நாடு மாநிலத்திற்கு தேவையான தடுப்பூசிகள் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பரிந்துரைக்கும் தடுப்பூசிகளையே தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. கூடிய விரைவில் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும். 60 வயதிற்கு மேற்பட்ட நீரிழிவு நோய், இதய பிரச்னை, உடல் பருமன் கொண்ட நோயாளிகள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் நீரிழிவு, உடல் பருமன், இதய பிரச்னை கொண்ட நோயாளிகளுக்கு வீட்டிற்கே சென்று அதற்கான தடுப்பு மருந்துகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் அறிமுகப்படுத்த உள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: