அதிமுகவினருக்கு தடுப்பூசி கேட்டு எம்எல்ஏ உதவியாளர் எனக்கூறி டாக்டருக்கு மிரட்டல்: வைரலாகும் ஆடியோ

திருப்பூர்: திருப்பூரில், ‘‘அதிமுகவினருக்கு தடுப்பூசி டோக்கன் தர வேண்டும். இல்லையெனில் அதிமுக பிரச்னை செய்யும்’’ என ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரை பல்லடம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆனந்தனின் உதவியாளர் என கூறி மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் ஆண்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரவீனுக்கு, அதிமுக நிர்வாகி ஒருவர் தடுப்பூசி டோக்கன் கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில் பேசும் அதிமுக நிர்வாகி, தன்னை பல்லடம் எம்எல்ஏ எம்எஸ்எம்.ஆனந்தனின் பி.ஏ. பேசுகிறேன் என கூறி பேச ஆரம்பிக்கிறார்.

அந்த உரையாடல் வருமாறு: அதிமுக நிர்வாகி: எங்களுக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும். உயரதிகாரி உங்களிடம் சொல்லவில்லையா? தடுப்பூசி கொடுக்கவில்லை என்றால் அதிமுக பிரச்னை செய்யும். அதை நீங்கள் சந்திக்க வேண்டும்.

டாக்டர் பிரவீன்: வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்கும் மக்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்க முடியும். உங்களுக்கு வழங்க முடியாது. ஏன் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்கிறீர்கள்? யார் சொன்னார்களோ அவர்களிடம் இருந்து உரிய அனுமதி வாங்கி வாருங்கள். அதன்பின்னர் கொடுக்கிறேன். நான் இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிப்பேன்.

அதிமுக நிர்வாகி: முதல்வரிடம்கூட புகார் செய்து கொள். இவ்வாறு அந்த ஆடியோவில் உரையாடல் இடம்பெற்றள்ளது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டருக்கு மிரட்டல் விடுத்தது அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் பரமராஜ் என தெரிய வந்துள்ளது. இது குறித்து டாக்டர் பிரவீன் தனது உயர் அதிகாரியிடம் புகார் செய்துள்ளார்.

Related Stories: