சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களுக்கு கடந்த மாதம் 11ம் தேதி பதவி ஏற்றனர். அப்போது பதவி ஏற்காத 10 எம்.எல்.ஏக்களில் 9 பேர் பின்னர் பதவியேற்றனர். இதில், கொரோனா தொற்று காரணமாக ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சண்முகையா பதவி ஏற்கவில்லை. இந்தநிலையில், நேற்று காலை தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை தலைவர் அறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சண்முகையா எம்எல்ஏவாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவருக்கு பேரவைத்தலைவர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.