2019 ஆண்டை விட 2020ல் அதிகம் இந்தியாவில் படிக்க குவியும் வெளிநாட்டு மாணவர்கள்: பிடெக் படிப்பு மீது மோகம்

புதுடெல்லி:  இந்தியாவில் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து மருத்துவம் உள்ளிட்ட  பல்வேறு படிப்புக்களுக்காக வெளிநாடு செல்வதற்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில் படிப்பதற்கு வெளிநாட்டு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு வரை 164 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இந்தியாவுக்கு படிக்க வந்தனர். 2019-2020ம் கல்வியாண்டில், கொரோனா அச்சுறுத்தல் இருந்த போதிலும் 168 நாடுகளை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப துறையே இதற்கு பிரதான காரணமாகும். பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவில் பொறியியல் படிப்பதற்கு வருகின்றனர். குறிப்பாக, பிடெக் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  

கடந்தாண்டு இந்தியாவில் படித்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 427 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு இந்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 348 ஆக உயர்ந்துள்ளது. பிடெக் பிரிவில் மட்டுமே 9,503 பேர் சேர்ந்துள்ளனர். பிஎஸ்சி.யில் 3,964 பேர், பிபிஏ.வில் 3,290 பேர் சேர்ந்துள்ளனர். இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினரின் அடுத்த விருப்பமாக பிஇ உள்ளது. இதற்கு 2,596 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிபார்மா 2,451, பிஏ 2,295, பிசிஏ.வுக்கு 1,820 மாணவர்கள் வந்துள்ளனர். 2019-2020ம் ஆண்டில் 1,779 வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர்ந்துள்ளனர். பிஎஸ்சி.யில் 1,109, பல் மருத்துவத்தில் 651 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

மருத்துவ படிப்புகளில் மாணவிகள் அதிகம்

இந்தியாவில் மருத்துவ பிரிவுகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், மாணவிகளே அதிகம் இருக்கின்றனர். எம்பிபிஎஸ்.சில் 58.9 சதவீதம், பிஎஸ்சி நர்சிங் படிப்பில் 92.2%, பல் மருத்துவத்தில் 61.9 சதவீதம் மாணவிகள் உள்ளனர். அதே நேரம், பிஎச்டி.யில் 78.2%, எம்பிஏ 68.4%, எம்ஏ.வில் 60.2 சதவீதம் என மாணவிகளை விட மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். மேலும், எம்எஸ்சி.யில் 70.3 சதவீதமும், பிடெக்.கில் 83.8 சதவீதமும் மாணவர்கள் உள்ளனர்.

Related Stories: