ஏற்கனவே 5 பெண்களை கல்யாணம் செய்து ஏமாற்றிவிட்டு 6வது திருமணம் செய்ய முயன்ற சாமியார் கைது: 32 இளம்பெண்கள் வலையில் சிக்கிய நிலையில் அதிரடி

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் திருமண தகவல் மையம் மூலம் வலைவீசி ஆறாவது முறையாக திருமணம்  செய்ய முயன்ற சாமியாரை, போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கிட்வாய் நகர் பகுதியை சேர்ந்த அனுஜ் சேதன் கேத்ரியா என்பவர் கடந்த 2019ம் ஆண்டில் ஷியாம் நகரில் வசிக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, அவரது மனைவியை பாலியல் ரீதியாக பலவகைகளில் துன்புறுத்தி உள்ளார். இதனால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்தாண்டு சாகேரி போலீசார் அனுஜ் சேதன் கேத்ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அவரை கைது செய்யவில்லை.  இதற்கிடையே கடந்த மே 11ம் தேதி கிட்வாய் நகர் போலீசில் அனுஜ் சேதன் கேத்ரியா மீது மற்றொரு வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், நேற்று குற்றம் சாட்டப்பட்ட அனுஜ் சேதன் கேத்ரியாவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் டி.சி.பி ரவீனா தியாகி கூறுகையில், ‘பாபா (சாமியார்) என்று அழைக்கப்படும் அனுஜ் சேதன் கேத்ரியா பஞ்சாராவில் ‘பாபா கல்யாண் சேவா அறக்கட்டளை’ ஒன்றை நடத்தி வருகிறார்.

அவர், தன்னை நாடிவரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மந்திரம், தந்திரம் செய்வதாக கூறி பாலியல் வலையில் சிக்கவைத்துள்ளார். இதுவரை 5 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொருவரிடமும் சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, அவர்களை துரத்திவிடுவார். இந்த நிலையில், ஆறாவது திருமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் தனது சுயவிபரத்தை வெளியிட்டார். அதில், 32 இளம்பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனால், அவர்களின் செல்போன் எண்களை பெற்று, அவர்களிடம் தினமும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்துள்ளார். எட்டாம் வகுப்பு வரை படித்த அனுஜ் சேதன் கேத்ரியா, தன்னை பி.எஸ்சி பட்டதாரி என்று கூறிவந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட பாபா, தன்னை ஒரு மந்திரவாதியாகவும், மதகுருவாகவும் அடையாளப்படுத்திக் கொண்டு பல பெண்களை தன்னுடைய வலையில் சிக்கவைத்து பலாத்காரம் செய்துள்ளார்.

அவர்களில் பாதிக்கப்பட்ட ஒரு பெண், கிட்வாய் போலீசில் புகார் அளித்தார். அப்போது, அவரிடம் விசாரணை நடத்திய போது ஏற்கனவே ஐந்து பெண்களை திருமணம் செய்திருந்தது தெரியவந்தது.  குற்றம்சாட்டப்பட்ட அனுஜ் சேதன் கேத்ரியா 6வது மனைவியை தேர்வு செய்யும் போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல மாவட்டங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐந்தாவது மனைவியை திருமணம் செய்த போது, தனக்கு ஏற்கனவே நான்கு மனைவிகள் இருப்பதை மறைத்து அவரை திருமணம் செய்துள்ளார். அந்த பெண் சாகேரி போலீசில் புகார் அளித்தபோது கூட, தனது கணவனுக்கு  4 திருமணம் நடந்திருப்பது தெரியவில்லை. குடும்ப பிரச்னை தொடர்பாக மட்டுமே புகார் அளித்ததால், அந்த காவல் நிலையத்தில் வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தது’ என்றார்.

Related Stories: