வி.கே.புரம் : மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கல்யாணி தீர்த்தம், அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில்,கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கல்யாணி தீர்த்தம் மற்றும் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது.
ஆண்டு முழுவதும் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் விழுவதால் வழக்கமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், கடந்த 2020 மார்ச் மாதம் முதலே சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இப்பகுதி, புலிகள் காப்பகம் என்பதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தொடர்ந்து மலை பகுதியில் சாரல் பெய்து வருவதாலும், பாபநாசம் அணையில் இருந்து 1561.33 கன அடிநீர் திறந்து விடப்படுவதாலும் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவி அருகே உள்ள கல்யாண தீர்த்த பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது.