நாகை வெளிப்பாளையத்தில் பரபரப்பு மின் வாரிய அலுவலகத்தில் அடுத்தடுத்து தீ விபத்து

நாகை : நாகை வெளிப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீவிபத்தில் கோப்புகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. நாகை வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் சாலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனைக்கு எதிரில் வெளிப்பாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகம் கடந்த 20 ஆண்டு காலமாக இயங்கி வந்தது. நாகை வெளிப்பாளையம், மணிக்கூண்டு, நல்லியான் தோட்டம், பால்பண்ணைச்சேரி, தெத்தி, வ.உ.சி. தாமரைக்குளம், மருந்து கொத்தள தெரு, நம்பியார் நகர் உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட மின் சார்ந்த பணிகளை இந்த உதவி மின் பொறியாளர் அலுவலகம் மூலம் இயக்குதலும், பராமரித்தல் பணிகள் மற்றும் மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த அலுவலகம் இயங்கி வந்த கட்டிடம் பழுது ஏற்பட்டதன் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகை கேசிபி நகர் அருகே மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் வெளிப்பாளையத்தில் உள்ள பழைய அலுவலகத்தில் பழைய கோப்புகள், மின்கலன்கள், மின்மாற்றிகள் ஆகியவை இருந்தது. இந்நிலையில் நேற்று அலுவலகத்தில் இருந்து திடீரென புகை வெளியே வந்தது. இதை பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் நாகை தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து விட்டு சென்றனர். சுமார் 2 மணி நேரம் கழித்து மீண்டும் அலுவலகம் உள்ளே தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு மீண்டும் வந்து தீயை அணைத்தனர். அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டதில் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், பழைய பொருட்கள், மின்கலன்கள் மற்றும் மின்மாற்றிகள் சேதமடைந்தது. தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் சேத மதிப்பீடு குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: