பேருந்து சேவை, ஜவுளிக்கடைகளுக்கு அனுமதி? : தமிழகத்தில் புதிய தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!!

சென்னை: தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாள் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் 21ம் தேதி முதல் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மே மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பரவல் 36 ஆயிரம் வரை இருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். அதன்படி, கடந்த மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை தொடர்ந்து இரண்டு வாரங்கள் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிபடிப்படியாக குறைய தொடங்கியது.

தொடர்ந்து, கடந்த 7ம் தேதி முதல் வருகிற 21ம் தேதி (திங்கள்) அதிகாலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. அதன்படி காய்கறி, பலசரக்கு, மீன், இறைச்சி, ஹார்டுவேர், சலூன், டீக்கடை, செல்போன், இரண்டு - நான்கு சக்கர பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து தற்போது தினசரி பாதிப்பு 9 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு 500 என்ற அளவில் உள்ளது. கோவை, ஈரோடு மாவட்டத்தில் மட்டுமே 1000ஐ தாண்டியுள்ளது. இதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21ம் தேதி (திங்கள்) அதிகாலையுடன் முடிவடைகிறது. இதையொட்டி, தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது மற்றும் பொது போக்குவரத்தை குறைந்த அளவில் (50 சதவீத இருக்கைகளுடன்) அனுமதிப்பது உள்ளிட்டவைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Related Stories: