புதுடெல்லி: ‘உங்கள் நிறுவனத்தின் சட்டத்தை விட, இந்திய நாட்டின் சட்டங்களே உயர்வானது,’ என்று டிவிட்டர் நிர்வாகிகளை நாடாளுமன்ற நிலைக்குழு கடுமையாக எச்சரித்துள்ளது. டிவிட்டருக்கும் மத்திய அரசுக்கும் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியின்போது இந்த சச்சரவு விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு எதிராக பரப்பப்பட்ட டூல் கிட் விவகாரத்தால் மீண்டும் மோதல் ஏற்பட்டது. மேலும், சமீபத்தில் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி குறை தீர்ப்பு அதிகாரிகளை நியமிக்க மறுத்த விவகாரத்தால் இந்த மோதல் பெரிதானது. இந்நிலையில், சமூக வலைதளங்களின் பயன்பாடு தொடர்பாக நாடாளுமன்றக் நிலைக்குழு கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது.