கணவரை பிரிந்து வேறொருவருடன் வாழும் நிலையில் 2 குழந்தைகளை கடத்திய தாய் கைது: உ.பி முதல் டெல்லி வரை பரபரப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கணவரை பிரிந்து வாழும் மனைவி, கிராமத்திற்கு வந்து தனது குழந்தைகளை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹார்பூர் புதத் பகுதியின் கட்சாஹ்ரா கிராமத்தில் உள்ள கோயிலுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் திடீரென மாயமாகினர். இதையறிந்த குடும்பத்தினர், அந்த கிராமம் உட்பட பல இடங்களில் தேடியும் 2 குழந்தைகளும் கிடைக்கவில்லை. குழந்தைகளின் தாய், தனது கணவருடன் தகராறு செய்து கொண்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். அதனால், தனது மனைவிதான் குழந்தைகளை கடத்திச் சென்றிருக்க வாய்ப்புள்ளது எனக்கூறி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, போலீசார் அந்த பெண் இருக்கும் இடத்தை தேடிவந்தனர்.

இருந்தும், அந்த பெண் குறித்த தகவல்கள் கிடைக்காததால் அவர் குறித்த விபரங்களை தெரிவிப்போருக்கு ரூ. 25,000 வெகுமதி அளிக்கப்படும் என்று போலீஸ் எஸ்.பி தினேஷ் குமார் பிரபு அறிவித்தார். போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, குழந்தைகளின் தாய்தான் தனது 2 குழந்தைகளையும் கடத்தி இருக்க முடியும் என்பதை உறுதி செய்தனர். அதனால், டெல்லி, பீகார் போன்ற மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதில் டெல்லி போலீசார் அளித்த தகவலின்படி, அந்த பெண் தனது குழந்தைகளுடன் டெல்லிக்கு வந்துள்ளது தெரியவந்தது. அதையடுத்து, அந்த பெண்ணை உத்தரபிரதேசம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  எஸ்.பி தினேஷ் குமார் பிரபு கூறுகையில், ‘மாயமான 2 குழந்தைகளின் தாயின் இருப்பிடம் 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்டது. அவர் டெல்லியில் காஷ்மீர் கேட் பகுதியில் 2 குழந்தைகளுடன் இருப்பது உறுதியானதால், டெல்லி போலீசாரின் உதவியுடன் குழந்தைகளை மீட்டுள்ளோம். தனது குழந்தைகளை கடத்திச் சென்ற தாயை கைது செய்துள்ளோம்’ என்றார்.

Related Stories: