பட்டாக்கத்தி, வீச்சரிவாளுடன் சினிமா பாடல் பின்னணியில் வீடியோ!: சமூக வலைத்தளங்களில் பரப்பிய வாலிபர்களால் பதற்றம்..!!

சிவகங்கை: மானாமதுரை பகுதியில் பட்டாக்கத்தி, வீச்சரிவாளுடன் சினிமா பாடல் பின்னணியில் வாலிபர்கள் வளம் வரும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மழவராயனேந்தல் கிராமத்தில் சரவணபுலி என்பவர் தனது நண்பர்கள் சரண், பாண்டியராஜன், முத்துக்குமார், அபிஷேக் ஆகியோருடன் வாழைத்தோப்பில் பட்டாக்கத்தி, வால், வீச்சரிவாளுடன் சினிமா பாடல் பின்னணியில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். 

சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற அந்த பாடலுடன் ஸ்டைலாக நடந்து வருவது போன்று படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் அதை பரப்பியுள்ளார். இதனை மழவராயனேந்தல் பகுதி இளைஞர்களுக்கும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அனுப்பியுள்ளார். அத்துடன் மட்டுமில்லாது மழவராயனேந்தல் பகுதி தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனங்களில் நேற்று மாலை அதிவேகமாக சென்றுள்ளனர். 

இதனை அப்பகுதி இளைஞர்கள் தட்டி கேட்டதால் இருதரப்புக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. தகவல் அறிந்த போலீசார் சரவணபுலியை கைது செய்து மேலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதனிடையே கிராமப்புறங்களில் சமூக பதற்றம் ஏற்படாமல் தடுக்க சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Related Stories: