கிரில் சிக்கன் தயாரித்தபோது மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி

ஆவடி: ஆவடியில் உள்ள ஒரு துரித உணவகத்தில் கிரில் சிக்கன் தயாரித்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார். ஆவடி காமராஜர் நகர் மெயின்ரோட்டில் துரித உணவகம் உள்ளது. இதன் உரிமையாளராக விஜய் என்பவர் உள்ளார். இந்த உணவகத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அசன் மாலிக் (25) என்பவர் கடந்த 2 ஆண்டாக தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அசன் மாலிக் துரித உணவகத்தில் கிரில்  இயந்திரத்தில் சிக்கன் தயாரித்து கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த உரிமையாளர் விஜய்  அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அசன் மாலிக் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். புகாரின்பேரில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: