கருப்பட்டி ஆலைகளில் கலப்படத்திற்கு பதுக்கிய 92 டன் வெள்ளை சர்க்கரை மூட்டைகள் பறிமுதல்

*உணவு பாதுகாப்பு துறை அதிரடி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட கருப்பட்டி தயாரிப்பு ஆலைகளில் கலப்படத்திற்கு வைக்கப்பட்டிருந்த 67 டன், கலப்படத்திற்கு விநியோகம் செய்வதற்காக சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 25 டன் வெள்ளை சர்க்கரை மூட்டைகளை  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி பறிமுதல் செய்தனர்.  தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன்  தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன், முனியராஜ் அடங்கிய குழுவினர் உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பு ஆலைகளில் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

 அப்பகுதிகளில் ஆய்வு செய்த ஐந்து ஆலைகளிலும் கருப்பட்டிகளில் கலப்படம் செய்வதற்காக  வைக்கப்பட்டிருந்த சுமார் 67 டன் எடையிலான ஆயிரத்து 340  வெள்ளை சர்க்கரை மூட்டைகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் இதற்குரிய எச்சரிக்கை நோட்டீஸ்களை  உரிமையாளர்களிடம் வழங்கினர். இதன் மதிப்பு சுமார் ரூ.23.25 லட்சம் ஆகும். இந்த ஆலைகள் மீது மாவட்ட வருவாய் அலுவலர் (ம) உணவு பாதுகாப்புத் துறையின் நீதி வழித் தீர்வு அலுவலரிடத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் பிரிவு 57-ன் கீழ் விரைவில் வழக்கு பதிவு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆலைகளுக்கு  வெள்ளை சர்க்கரை விநியோகம் செய்த உடன்குடியில் உள்ள ஒரு மொத்த விற்பனையாளரிடத்திலும் ஆய்வு செய்தனர். இதில் அந்நிறுவனம் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் இன்றியும்,  உரிய பில்களின்றியும், கலப்படத்திற்கு விநியோகம் செய்வதற்காக சுகாதாரமற்ற முறையில் சேமித்தும் வைத்திருந்த சுமார் 25 டன் எடையிலான 505 மூட்டைகள்  வெள்ளை சர்க்கரையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 8.5 லட்சங்களாகும். அந்நிறுவனம் மீது டிஆர்ஓ (ம) உணவு பாதுகாப்புத் துறையின் நீதி வழித்தீர்வு அலுவலரிடத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் பிரிவு 57ன் கீழ் வழக்கு பதிவு செய்யும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனனர்.

கடும் நடவடிக்கை

கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு உற்பத்தியாளர்கள் வெள்ளை சர்க்கரையை கலப்படத்திற்கு  மீண்டும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது வழக்குபதிவு செய்து, இரட்டிப்பு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 3வது முறையாக கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு ஆலைகளில் வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டால், அந்நிறுவனங்களது உரிமத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பாளர்களுக்கு கலப்படத்திற்காக  வெள்ளை சர்க்கரை விற்பனை செய்யும் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத் துறை மா வட்ட நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன்  எச்சரித்துள்ளார்.

Related Stories: