உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்: பிரதமரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: மத்திய அரசுடனான எங்கள் அணுகுமுறை,  உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற வகையில் இருக்கும்  என முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன் முறையாக மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி  சென்று, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 25 நிமிடம்  நடைபெற்றது. பிரதமரை சந்தித்து பேசிய பின் முதல்வர் மு.க.ஸ்டாலின்  டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு, தமிழை ஆட்சி மொழி ஆக்குவது, கச்சத்தீவு பிரச்னை, மீனவர் பிரச்னை ஆகியவை, கடந்த 5 வருடங்களாகவும், அதற்கு முன்பும் நிறைவேற்றப்படாத திட்டங்களாகவும், அறிவிப்புகளாகவும் இருந்து வருகிறது. இது வரக்கூடிய நாட்களில் மட்டும் எப்படி நிறைவேற்றப்படும் என்பதை எந்த அளவு நம்புவது?

நாங்கள் காரண காரியங்களை சொல்லி இருக்கிறோம். நான் முழுமையாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களோடு, அதிகாரிகளோடு கலந்து பேசி, நிச்சயமாக நல்ல முடிவு எடுப்பேன், நம்பிக்கையோடு இருங்கள் என்று உறுதி கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கையில் தான் நாங்கள் இருக்கிறோம்.

தமிழக அரசு எந்தவகையான அணுகுமுறையை மத்திய அரசிடம் கடைபிடிக்கும்? மோதல் போக்கை கடைபிடிக்குமா அல்லது இணக்கமான போக்கை கடைபிடிக்குமா?

எங்களை ஆளாக்கிய தலைவர் கலைஞர் சொன்னது, உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம். அந்த அடிப்படையில் எங்களுடைய நடைமுறை நிச்சயமாக இருக்கும்.

7 பேர் விடுதலையில் தமிழக அரசினுடைய தற்போதைய நிலைப்பாடு என்ன? அவர்களை விடுவிப்பதற்கு பதிலாக ஒரு நீண்ட கால பரோல் வழங்கலாம் என்ற ஒரு தகவல் வந்துள்ளதே?

தமிழ்நாடு ஆளுநர் அதை இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். இந்திய குடியரசுத் தலைவருக்கு நினைவூட்டல் கடிதம் நாங்கள் பொறுப்புக்கு வந்தவுடன் அனுப்பி உள்ளோம். தற்போது அது நீதிமன்றத்தில் உள்ளது. அது போகிற போக்கை பார்த்து, எங்களுடைய நடைமுறையை  கடைபிடிப்போம்.

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து...

தமிழ்நாட்டிற்கு போதுமான தடுப்பூசி இதுவரை வழங்கவில்லை என்பது உண்மை தான், அதை நான் மறுக்கவில்லை. தடுப்பூசி போதுமான அளவிற்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். அவரும் வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார். அவ்வப்போது பிரதமரிடமும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனும் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருக்கிறோம். அவர்களும் அனுப்பி வைக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்களையும் சொல்கிறார்கள். இருந்தாலும் செங்கல்பட்டில் இருக்கிற, நீலகிரி மாவட்டத்தில் இருக்கிற தடுப்பூசி மருந்து தயாரிக்கிற தொழிற்சாலையை இயக்கினாலே இதை ஒரளவுக்கு தீர்க்க முடியும், அப்படி அந்த முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டு இருக்கிறோம். இன்றைக்கும் பிரதமரிடம் தெரிவித்து உள்ளோம்.

திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, முதியோருக்கான உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று சொல்லி இருக்கிறீர்கள். அது தொடர்பாக இன்றைக்கு பிரதமர் அவர்களுடனான சந்திப்பில் நிதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளீர்களா? தமிழகத்தில் அந்த திட்டங்கள் எப்போது செயல்பட வாய்ப்பு இருக்கிறது?

ஆட்சிக்கு வந்து 40 நாட்கள் தான் ஆகியிருக்கிறது. எந்த அளவிற்கு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். நிச்சயமாக தேர்தல் நேரத்தில் அறிவித்த உறுதி மொழிகளையும், வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றுகின்ற முயற்சியில் நாங்கள் ஈடுபடுகிறோம். அதற்கான முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறோம்.

தடுப்பூசி வழங்குவது தொடர்பான தெளிவான வெளிப்படைத்தன்மை எப்போது வரும்?

முறையாக கேட்கிற அளவில் கொடுத்தால் எல்லோருக்கும் கிட்டத்தட்ட வந்துவிடும். தடுப்பூசி பற்றாக்குறை பற்றி கூட சொல்லக் கூடாது என்று ஒன்றிய அரசு கூறி இருக்கிறது. இதிலே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது தான். பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக நிறைய வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து நீங்கள் முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறீர்கள், அதற்காக டெல்லி பத்திரிகையாளர்கள் சார்பில் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆட்சியின் போது, ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளை ஓட்டுமொத்தமாக அகற்ற வேண்டும், மூட வேண்டும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தீர்கள், டாஸ்மாக்கை ஒட்டுமொத்தமாக மூட வாய்ப்பு இருக்கிறதா?

படிப்படியாக குறைக்கப்படும் என்ற அடிப்படையில் தான் சொல்லி இருக்கிறோம். படிப்படியாக நிச்சயமாக குறைக்கப்படும். கடந்த கால ஆட்சியில் எப்படி படிப்படியாக குறைக்கப்பட்டதோ, அதே அடிப்படையில் குறைக்கப்படும்.

திமுக ஆட்சிக்கு வராது, அப்படி வந்தாலும், மு.க. ஸ்டாலின் திறமையான முதல்வராக செயல்பட மாட்டார் என்று பலரும் புகார் தெரிவித்திருந்தார்கள். ஆனால் நீங்கள் பதவிக்கு வந்து 42 நாட்கள் ஆகிறது, முதல்வராக இந்த 42 நாட்களும் எவ்வாறு சென்று கொண்டு இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு நீங்கள் முதல்வராக பதவியேற்றுக் கொண்டால் இதுபோன்ற நடவடிக்கைகளை எல்லாம் நான் செய்வேன், நடத்துவேன் என்ற ஒரு எண்ணத்தில் இதுபோன்று நடவடிக்கைகளை செய்து கொண்டு இருக்கிறீர்களா? 24 மணிநேரமும் தொடர்ந்து பணியாற்றுகிறீர்கள், இப்போது டெல்லிக்கு எல்லாம் வந்திருக்கிறீர்கள், திட்டமிட்டு நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்களா?

ஒரே வரியில் சொல்கிறேன். ஓட்டு போட்டவர்களுக்காக மட்டும் அல்ல, ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும், எங்களுக்கு  ஓட்டு போடாதவர்கள் எங்களுக்கு  ஓட்டு போடவில்லையே என்று வருத்தப்பட வேண்டும். அப்படி எங்கள் பணி இருக்கும். அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறோம். அதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: