செங்கம் அருகே போதையில் வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்த மைத்துனரை வெட்டிக்கொன்ற அண்ணி

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் டவுன் சலவநாய்க்கன்பேட்டையை சேர்ந்தவர் செல்வம் (50), சுற்றுலா பஸ் டிரைவர். இவரது மனைவி பராசக்தி (45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். செல்வம் டிரைவர் வேலைக்கு சென்றுவிட்டு 2 அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறைதான் வீட்டிற்கு வருவாராம். இவரது தம்பி ராஜா (48), லாரி டிரைவர். திருமணமான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் மனைவி சில மாதங்களில் அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ராஜா தனியாகவும், அவரது அண்ணன் குடும்பத்தினர் பக்கத்து வீட்டிலும் வசித்துள்ளனர். இந்நிலையில் ராஜா, வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து அண்ணி பராசக்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வீடு புகுந்து பராசக்திக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பராசக்தி, அரிவாளால் ராஜாவின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் இறந்தார். தகவலின்படி செங்கம் போலீசார் வழக்குப் பதிந்து பராசக்தியை கைது செய்தனர்.

Related Stories: