அதிமுக-வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி!: சசிகலாவு-க்கு எதிராக அதிமுக கூட்டங்களில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்..!!

சென்னை: அதிமுக-வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சசிகலாவை கண்டிப்பதாக சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அதிமுக கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுக-வை அபகரிக்க சசிகலா சூழ்ச்சி செய்வதாக கூறி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுகவினர் 16 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சசிகலாவுடன் உரையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் அதிமுகவினருடன் சசிகலா தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. 

எனவே சசிகலாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டன தீர்மானம் நிறைவேற்ற பழனிசாமி அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதிமுக-வில் உறுப்பினராக கூட சசிகலாவுக்கு  தகுதி இல்லை என சி.வி.சண்முகம் தீர்மானத்தை வாசித்தார். சேலம் ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்திலும் சசிகலாவிற்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 8 எம்.எல்.ஏக்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் அதிமுக-வில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சசிகலா பேசி வருவதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அதிமுக சாதி கட்சியாக செயல்படுவதாக சசிகலா குற்றம்சாட்டியதுடன், தொண்டர்கள் நீக்கப்படுவதை பார்த்து சும்மா இருக்க மாட்டேன் என ஆவேசமாக கூறியிருந்தார். இப்படி சசிகலா தரப்பும் - எடப்பாடி பழனிசாமி தரப்பும் பகிரங்கமாகவே மோதி வருவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை அதிகரித்துள்ளது. 

Related Stories: