பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிட்டு வழங்கப்படும்!: உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. விளக்கம்..!!

டெல்லி: பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிட்டு வழங்கப்படும் என்பது பற்றி சி.பி.எஸ்.இ. விளக்கம் அளித்திருக்கிறது. கொரோனா காரணமாக பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. 

நிபுணர் குழுவை அமைத்து பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் வழங்குவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்திருக்கிறது. அதன்படி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்த மாணவர்களது 10 மற்றும் 11ம் வகுப்புகளில் இருக்கும் 5 பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்த 3 பாடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பிளஸ் டூ யூனிட் தேர்வுகள், பருவ தேர்வுகள், செய்முறை தேர்வுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது. அவ்வகையில் 10 மற்றும் 11ம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் தலா 30 சதவீதமும், 12ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களின் 40 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. கூறியிருக்கிறது. 

மதிப்பெண் கணக்கீட்டை ஏற்காத மாணவர்கள், கொரோனா குறைந்த பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ம் தேதிக்குள் மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று சி.பி.எஸ்.இ. குறிப்பிட்டுள்ளது. 

Related Stories: