எழும்பூர் மருத்துவமனையில் முதல்கட்டமாக பாலூட்டும் தாய்மார்கள் 9 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி: பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மூலம் தொற்று பரவாது

சென்னை: எழும்பூர் மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது. முதல்கட்டமாக 9 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி நேற்று போடப்பட்டது. பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வினை, சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில், மருத்துவமனை இயக்குனர் விஜயா நேற்று தொடங்கி வைத்தார்.  பின்னர், நிருபர்களிடம் மருத்துவமனை இயக்குனர் விஜயா கூறியதாவது:  பிரசவத்திற்கு பிறகு, பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று  எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் துவங்கி உள்ளோம். முதல்கட்டமாக 9 தாய்மார்களுக்கு கோவாக்சின்  தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் யாருக்கும் எந்த பக்கவிளைவுகளும் இல்லை. கர்ப்பிணிகளும் தடுப்பூசி போடுவதற்கு நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். பாலூட்டும் தாய்மார்கள் யாரும் பயப்பட வேண்டாம். பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலமாக கொரோனா தொற்று பரவுகிறதா என்று அறிய, 700 தாய்மார்களின், தாய்ப்பால், குழந்தையின் ரத்த பரிசோதனை, பனி குடம் மாதிரி ஆகியவற்றை ஆய்வு செய்ததில், ஒரு டெஸ்ட் மட்டுமே பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. மீதம் 699 டெஸ்ட் நெகட்டிவ் ஆக வந்துள்ளது. இதனால்,  பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மூலமாக கொரோனா தொற்று பரவவில்லை. மேலும், தாய்மார்கள் பாலூட்டும் போதும் முகக்கவசம் அணியவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: