வனப்பகுதியில் மோதல் ஆந்திராவில் 4 பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

திருமலை: ஆந்திர வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், கொய்யூறு மண்டலத்தில் உள்ள மம்பா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் திடீரென போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இவர்களில் 2 ஆண்கள் ரானாதேவ், அசோக் ஆகியோர் என்பதும், 2 பெண்கள் லலிதா, பைக்கி ஆகியோர் என்பதும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் 2 பெண்களின் அடையாளம் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி, கத்தி உட்பட ஆயுதங்கள், மாவோயிஸ்டுகள் பயன்படுத்திய பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

Related Stories: