ஆனிமாதத்தில் சுபமுகூர்த்தம்: நெல்லை, தூத்துக்குடியில் களைக்கட்டிய திருமணங்கள்

நெல்லை: ஆனி மாதத்தில் சுபமுகூர்த்த தினமான இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பல்வேறு கோயில்களில் திருமணங்கள் களைக்கட்டின. கொரோனா 2ம் கட்ட அலை காரணமாக தமிழகத்தில் கடந்த இரு மாதமாக பல்வேறு சுபநிகழ்வுகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதிலும் திருமணங்கள், சடங்கு உள்ளிட்ட வைபவங்கள் மண்டபம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த மாதம் வளர்பிறையில் நடக்க வேண்டிய திருமணங்கள் அரசின் ஒருநாள் தளர்வு நாளான மே 23ம்தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்டன. இதில் சிலர் பஸ்கள் இயக்கத்தை காரணம் காட்டி திருமண தேதிகளை மாற்றி, முன்கூட்டியே மே 23ம்தேதியன்று திருமணத்தை நடத்தி முடித்தனர்.

இந்நிலையில் அதைத்தொடர்ந்து இரண்டு வாரம் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இப்போது மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று ஆனி மாதம் வளர்பிறையில் நிறைந்த முகூர்த்த நாள் என்பதால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பல்ேவறு ேகாயில்களில் திருமணங்கள் நடந்தன. கோயில்களுக்குள் உள்ளே செல்ல அனுமதி இல்லையென்றாலும், திருமணம் நடத்துவோர் கோயில் வாசலில் தாலிக்கட்டி, வெளியில் இருந்தபடியே சுவாமியை தரிசித்து சென்றனர்.

நெல்லை குறுக்குத்துறை முருகன்கோயில், சாலைகுமாரசுவாமி கோயில், பாளை மேலவாசல் முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் இன்று காலையில் திருமணங்கள் நடந்தன. சிலர் வீடுகளில் திருமணம் நடத்தி, தெருவாசலில் பந்தி பரிமாறினர். திருமண மண்டபங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதால், வீடுகள் சார்ந்தே பலர் விருந்து நிகழ்வுகளை நடத்தினர்.

Related Stories: