நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் 36 மையங்களில் இன்று தடுப்பூசி போடப்படுகின்ற நிலையில் தடுப்பூசி மையங்களில் பொது மக்கள் கூட்டம் அதிகாலையிலேயே நிரம்பி வழிந்தது. குமரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 542 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் முதல் டோஸ் 1 லட்சத்து 87 ஆயிரத்து ஒருவரும், 2ம் டோஸ் 47 ஆயிரத்து 541 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று 2 ஆயிரத்து 256 பேர் தடுப்பூசி போட்டிருந்த நிலையில் மேலும் 11 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டும், 3 ஆயிரம் டோஸ் கோவாக்சினும் நேற்று நள்ளிரவு வந்து சேர்ந்தது. அதைத் தொடர்ந்து இன்று காலை முதல் 36 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
தோவாளை ஒன்றியத்தில் திருப்பதிசாரம் அரசு உயர்நிலை பள்ளி, கடுக்கரை அரசு உயர்நிலை பள்ளி, செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் தேரூர் கஸ்தூரிபாய் நடுநிலை பள்ளி, தோப்பூர் அரசு உயர்நிலை பள்ளி, அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் புதூர் அரசு உயர்நிலை பள்ளி, மேலகிருஷ்ணன்புதூர் அரசு நடுநிலை பள்ளி, ராஜாக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குருந்தன்கோடு கட்டிமாங்கோடு அரசு நடுநிலை பள்ளி, குளச்சல் புனித மேரி மேல்நிலை பள்ளி, முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கிள்ளியூர் ஒன்றியத்தில் வெள்ளியாவிளை புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளி, கரவிளாகம் அரசு மேல்நிலை பள்ளி, கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது.
இதேபோல் முஞ்சிறை ஒன்றியத்தில் வாவறை அரசு தொடக்க பள்ளி, சூழால் லிட்டில் பிளவர் ஆர்சி தொடக்க பள்ளி, தூத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேல்புறம் ஒன்றியத்தில் பாலவிளை அரசு தொடக்க பள்ளி, மாங்கோடு புனித தாமஸ் ஆர்சி தொடக்க பள்ளி, இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருவட்டார் ஒன்றியத்தில் மாத்தூர் அரசு உயர்நிலை பள்ளி, திருவரம்பு அரசு உயர்நிலை பள்ளி, குட்டக்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேச்சிப்பாறை பழங்குடியினர் முகாம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. இது தவிர தக்கலை ஒன்றியத்தில் புதூர் அரசு நடுநிலை பள்ளி, கிராமம் அரசு நடுநிலை பள்ளி, கோதநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் கோட்டார் கவிமணி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 2ம் டோஸ் மட்டும் போடப்படுகிறது. ராமன்புதூர் கார்மல் மேல்நிலை பள்ளி, நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா ஆகிய இடங்களிலும் என்று கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. கோவாக்சின் தடுப்பூசி பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனை, நாகர்கோவில் இந்து கல்லூரி, நாகர்கோவில் எஸ்எம்ஆர்வி மேல்நிலை பள்ளி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆகிய இடங்களிலும் போடப்படுகிறது. இந்த மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடம் ஆர்வம் அதிகரிப்பு காரணமாக கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் காலை 8.30 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்களுக்கு பின்னர் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.குருந்தன்கோடு வட்டாரம் சார்பில் கட்டிமாங்கோடு அரசு நடுநிலை பள்ளிக்கு 400 டோசும், குளச்சல் தூய மரியன்னை மேல் நிலை பள்ளியிக்கு 400 டோசும், முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 200 டோஸ் மருந்தும் வந்தது. இந்த முகாம்களில் தடுப்பூசி போட அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். குளச்சல் தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளியில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலையிலும் பொது மக்கள் குவிந்தனர். அவர்கள் பள்ளிக்கூட வளாகத்திற்கு வெளியே சாலை வரைய நீண்ட கியூ வரிசையில் காத்து நின்றனர். வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுப்பட்டனர்.சுவாமியார்மடத்தை அடுத்த குட்டக்குழி ஆரம்ப சுகாதார நிலையில் 250 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான டோக்கன் இன்று காலை 8 மணிக்கு வழங்கப்பட்டன. இருப்பினும் நேற்று நள்ளிரவு முதலே ஏராளமான மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரண்டனர். வரிசையில் 500 பேர் நின்றதால் கூட்டம் நெரிசல் ஏற்பட்டுள்ளது.