இஸ்ரேல் தூதரக குண்டு வெடிப்பு வழக்கு: சிசிடிவியில் பதிவான 2 மர்ம நபர்கள் யார்?... புகைப்படத்தை வெளியிட்டது என்ஐஏ

புதுடெல்லி: டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய  இருவரின் புகைப்படத்தை தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே உள்ள லுடீயன்ஸ் மண்டல பகுதியில் கடந்த ஜனவரி 29ம் தேதி  திடீர் குண்டுவெடிப்பு நடந்தது. அதனால், அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. இருப்பினும், குண்டுவெடிப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தூதரகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த குண்டுகளின் தீவிரம் குறைந்தவை என்று டெல்லி காவல்துறை தனது அறிக்கையில் கூறியிருந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால், மூன்று வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என் ஐஏ) விசாரித்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களின் சிசிடிவி பதிவுகளை தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சியில், இரண்டு இளைஞர்கள் தூதரகத்திற்கு வெளியே சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து செல்கின்றனர். குண்டுவெடிப்பு நடந்த இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகிலுள்ள இடத்தை நோக்கி அவர்கள் நடந்து செல்வதைக் காண முடிகிறது. ஒருவர் நீல நிற சட்டை அணிந்துள்ளார். மற்றவர் கருப்பு பனியன் அணிந்துள்ளார். அவரிடம் ஒரு பை உள்ளது. ஒரு இளைஞனின் காலில் காயம் ஏற்பட்டது போல் நடந்து செல்கிறார்.

இருவரும் வெடிகுண்டுகளை வைத்தார்களா என்பது உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இருவரும் அப்பகுதியில் நடந்து செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: