தண்ணீர் குடிங்க!: ரொனால்டோ-வின் சிறிய செய்கையால் 29,000 கோடி இழந்த கோகோ- கோலா நிறுவனம்..!!

புத்தபெஸ்ட்: பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒரு சிறிய செய்கையால் கோகோ - கோலா குளிர்பானத்தில் பங்குகள் பல ஆயிரம் கோடி ரூபாய் சரிந்திருக்கிறது. கோகோ - கோலா நிறுவனம் யூரோ கால்பந்து போட்டியின் அதிகாரபூர்வ விளம்பரதார நிறுவனமாகும். இந்நிலையில் யூரோ போட்டி கால்பந்து தொடரில் நேற்று போர்ச்சுகல் அணியும், ஹங்கேரி அணியும் மோதினர். 

அதற்கு முன்பாக ஹங்கேரி தலைநகர் புத்தபெஸ்ட் நகரில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அந்த அணியின் மேனேஜர் பெர்னாண்டோ சான்ரோஸ் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ முன்பாக இரண்டு கோகோ - கோலா குளிர்பான பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. 

அவற்றை எடுத்து மாற்றி வைத்த ரொனால்டோ, அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து காட்டி தண்ணீரை குடியுங்கள் என்றார். கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக இருந்து வரும் ரொனால்டோ, பல நேரங்களில் கோகோ - கோலா உள்ளிட்ட துரித உணவுகளுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார். போர்ச்சுகல் மட்டுமின்றி  ஐரோப்பிய கண்டம் முழுவதுமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் ரொனால்டோவின் இந்த ஒரு செய்கை ஐரோப்பிய பங்கு வர்த்தகத்தில்  கோகோ - கோலாவிற்கு பெரும் நஷ்டத்தை உருவாக்கியுள்ளது. 

மாலை 3 மணிக்கு வர்த்தகம் தொடங்கிய போது கோகோ - கோலாவின் பங்குகளின் மதிப்பு 242 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் கோகோ - கோலா பாட்டில்களை நகர்த்தி வைத்த கிறிஸ்ட்டியானோ ரொனால்டோவின் ஒரு சாதாரண செயலுக்கு பிறகு சில நிமிடங்களில் 4 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 29,337 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

Related Stories: