சென்னை: கொரோனா 2வது அலை பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதற்கு போதுமான நிதியை இயன்றவர்கள் தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினர் நாள்தோறும் முதல்வர் நிவாரண நிதிக்கு நேரிலும், வங்கி மூலமும் நிதி அளித்து வருகின்றனர். நேற்று சென்னை தலைமை செயலகத்துக்கு வந்த நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் சேதுபதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா பேரிடர் தடுப்பு பணிகளுக்காக ரூ.25 லட்சம் நிதி வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘கொரோனா பெருந்தொற்றை கண்டு யாரும் பயந்துவிட கூடாது. பயம்தான் நம் முதல் எதிரி. எனவே, எதையும் பயப்படாமல் எதிர்கொள்ள வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்றார்.