ரூ.10 ஆயிரம் கோடி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம்

சென்னை: ரூ.10 ஆயிரம் கோடி செலவில் நடக்கும் திட்டப்பணிகள் தொடர்பாக  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு  தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடக்கிறது. தமிழக பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு அரசுத் துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவது, அரசு கட்டிடங்களின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது என பல்வேறு பணிகள் நடக்கிறது. இதற்காக கடந்த ஆண்டில் மட்டும் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியை கொண்டு  புதிய மாவட்டங்களுக்கான கலெக்டர் அலுவலகங்கள் கட்டும் பணி மற்றும் விருதுநகர், ராமநாதபுரம், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் உட்பட 11 மருத்துவ கல்லூரி கட்டிடங்கள் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சேலத்தில் கால்நடை ஆராய்ச்சி நிலையம், தேனியில் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வணிகவரி வருவாய், பதிவுத்துறை அலுவலகங்களுக்கு புதிய கட்டிங்கள் கட்டும் பணி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து பொறியாளர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். காலையில் கட்டுமான பிரிவுக்கும் மாலையில் மருத்துவ கட்டுமான பிரிவின் மூலம் நடக்கும் கட்டுமான பணிகள் குறித்தும் ஆலோசனை ஆய்வு செய்யப்படுகிறது.

Related Stories: